தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-09-21 08:08 GMT
தட்டார்மடம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17 ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.   

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி,   கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், இளைஞர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்