தட்டார்மடம் கொலை வழக்கு: ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்; வழக்கில் முதல் நபராக சேர்ப்பு

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Update: 2020-09-21 09:42 GMT
தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வந்தனர்.  போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.   

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி,   கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

இந்நிலையில், இளைஞர் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.  இந்த உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் பிறப்பித்து உள்ளார்.  இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்