எம்எல்ஏ பிரபு திருமணம்: என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் -சவுந்தர்யா தந்தை

என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் என சவுந்தர்யா தந்தை சுவாமிநாதன் கூறி உள்ளார்.

Update: 2020-10-09 07:24 GMT
சென்னை

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சவுந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை கடத்தி பிரபு திருமணம் செய்துகொண்டதாகவும் அவரிடமிருந்து பெண்ணை மீட்டுத்தரக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ பிரபு திருமணம் விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்எல்ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.  நீதிமன்ற உத்தரவின் படி, மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன் என எம்எல்ஏ பிரபு கூறினார்.

இந்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. முன்னதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யா நீதிமன்றம் வருகை தந்தார். அதையடுத்து  நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் சவுந்தர்யாவும், சுவாமிநாதனும் ஆஜர்படுத்தப்பட்டனர்.  மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவரும் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறி அவகாசம் அளித்து  தீர்ப்பை தள்ளி வைத்தனர். 

தன்னை யாரும் கடத்தவில்லை, கணவர் பிரபுவுடன் சேர்ந்து செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா கணவருடன் செல்ல அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில் என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் என தந்தை சுவாமிநாதன் கூறி உள்ளார்.

வயது வித்தியாசம் காரணமாகவே எனது மகள்-பிரபு திருமணத்தை எதிர்க்கிறேன்.வழக்கு தொடராமல் இருக்க எனக்கு ரூ.1கோடி கொடுக்க பிரபு முன்வந்தார்.

என்னை தந்தை என்றும், என் மகளை தங்கை என்றும் கூறி பழகி வந்தார் பிரபு.தங்கை என்று கூறி பழகி வந்த என் மகளை தற்போது மனைவியாக்கியுள்ளார் எம்எல்ஏ பிரபு.

என் மகளை மீட்டுத் தரக்கோரி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். என் மகளுக்கு 15 வயது இருக்கும் போதே காதலித்ததாக பிரபு கூறியுள்ளதால் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன் என கூறி உள்ளார்.



மேலும் செய்திகள்