வி.ஐ.டி. பட்டமளிப்பு விழா: மாணவர்கள் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் பேச்சு

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2020-10-09 23:19 GMT
வேலூர்,

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை குழுவின் முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்கள் தங்களுடைய அறிவாற்றலை விரிவுபடுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பணிபுரிய கற்றுக்கொள்ளும்போது கூட்டு முயற்சியின் அனுபவங்களை பெறுவார்கள். முன்னோர்களைப் பின்பற்றி வந்த தற்போதைய மாணவர்களாகிய நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் கூட்டுமுயற்சியை பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘ஆகுமெண்டெட் ரியாலிட்டி’ என்ற 2 தொழில்நுட்பங்கள் உலக அளவில் வளர்ச்சி அடைந்து வருவதன் காரணமாக மனிதனுடைய தொழில் திறமையும் உயர்வகை தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக் கூடிய பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழலும் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் மாணவ- மாணவிகளை தயார்படுத்த வேண்டும். இதனால் கல்வி கட்டமைப்பில் தொழிற்கல்வி முக்கியத்துவம் பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வி.ஐ.டி. துணை வேந்தர் ராம்பாபுகொடாளி வரவேற்றார். இதில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு 7,444 மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 229 மாணவர்கள் முனைவர் பட்டம் மற்றும் 55 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்