வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-01 15:53 GMT
சென்னை,

வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது இலங்கையின் திரிகோணமலைக்கு தென் கிழக்கில் 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த ‘புரெவி’ புயல் திரிகோணமலையில் நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மன்னார் வளைகுடா பகுதியை டிசம்பர் 3 ஆம் தேதி கடக்கும் என்றும் கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் 4 ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுருப்பதால், பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்