உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-12-22 21:32 GMT
கோப்புப்படம்
சென்னை, 

அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கொரோனா மையத்தில்தான் சிகிச்சைபெற வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் தகரம் அடிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் பிரியங்கா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன? எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிழக அரசு, மாநகராட்சி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் வீடுகள், தெருக்களில் தகரம் அடிப்பது இல்லை. வீடுகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதனால் ஸ்டிக்கரும் ஒட்டுவது இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கும், கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கும், மனுதாரருக்கும் பாராட்டுத் தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

பின்னர், உருமாற்றம் பெற்று பரவும் கொரோனா காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மராட்டியத்தில் இரவு நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள், மோசமான விளைவுகளைத் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மிகத் தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும் செய்திகள்