கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் அரசின் முடிவிற்கு கமல்ஹாசன் வரவேற்பு

கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் அரசின் முடிவிற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-10 10:15 GMT
கோவை,

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13-ந் தேதி மதுரையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுவரை 4-கட்டமாக பிரசாரம் நடத்தி முடித்துள்ள கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

இதற்காக பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் வெற்றிநடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். ஆனால் தமிழகம் வெற்றி நடை போட வில்லை. தமிழகம் ஊழலில் இருப்பிடமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டிய கடமை தனக்கு உள்ளது. விரைவில் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம்.

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் தமிழக அரசின் முடிவை தான் வரவேற்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்