“தமிழகம் வெற்றிநடை போட்டால் நாங்கள் வந்திருக்க மாட்டோம்” - கமல்ஹாசன்

“தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம்” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-10 13:23 GMT
சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வைத்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ரஜினி எடுத்த முடிவு அவரது விருப்பம் என்றும், அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை, என்றும் கூறினார்.

மேலும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஆரோக்கியமான முடிவு என்று தெரிவித்தார். தொழில் நடக்க வேண்டும் அதே நேரம் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இது ஆரோக்கியமான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா? என்ற கேள்விக்கு, “தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்