கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2021-01-12 14:31 GMT
சென்னை,

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 2021 பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 6 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி வரும்14 ஆம் தேதி அவனியாபுரம், 15 ஆம் தேதி அலங்காநல்லூர் மற்றும் 16 ஆம் தேதி பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி வேலூர் மாவட்டத்தில் 25 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் 1 இடத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இடங்களில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகியவற்றை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்