தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக, விசிக உடன் நாளை பேச்சுவார்த்தை

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக மற்றும் விசிக ஆகிய 2 கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Update: 2021-02-28 05:45 GMT
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் தி.மு.க. ஆர்வம் செலுத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நேற்று இரவு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீட்டு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், அதனை தொடர்ந்து 5 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதை தொடர்ந்து திமுகவின் கூட்டணி கட்சிகளான மதிமுக மற்றும் விசிக ஆகிய 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் நிலையில், அவரது சுற்றுப்பயணம் நிறைவடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்