மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் திடீர் ராஜினாமா

மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை பி.ஆர்.சுந்தரம் திடீர் ராஜினாமா செய்தார்.

Update: 2021-03-02 19:12 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி.யான இவர், நாமக்கல் மாவட்ட ஊராட்சியில் 6-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின்னர் அவர் மாவட்ட ஊராட்சி குழுவின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.  இந்தநிலையில் பி.ஆர்.சுந்தரம் நேற்று திடீரென மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர், 6-வது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை அவர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதாவிடம் வழங்கினார். 
அந்த கடிதத்தில், தான் யாருடைய தூண்டுதலும் இன்றி, சுய விருப்பத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த கடிதத்தின் நகலை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திலும் வழங்கினார். ராஜினாமா செய்த பி.ஆர்.சுந்தரம் திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அவரின் திடீர் ராஜினாமா மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்