7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் கருத்து: தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடி தாக்குதல்

7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் கருத்து: தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடி தாக்குதல் கே.எஸ். அழகிரி கருத்து.

Update: 2021-03-26 19:49 GMT
சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போல், புதுச்சேரியிலும் மருத்துவ படிப்புகளில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு எடுத்தது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தருமாறு மத்திய பா.ஜ.க. அரசுக்கு உத்தரவிடக்கோரி, புதுச்சேரியைச் சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற மாணவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில், ‘ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டு முடிவு, நீட் தேர்வின் சாராம்சத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது குறித்து, மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ள கருத்து, தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடித் தாக்குதலாகும். பா.ஜ.க. அரசின் இத்தகைய அணுகுமுறை சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்