கொரோனாவில் இருந்து குணம்: கனிமொழி எம்.பி. வீடு திரும்பினார் தனிமைப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தல்

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனிமொழி எம்.பி. நேற்று வீடு திரும்பினார். அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2021-04-08 03:01 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வந்தார்.

அவருக்கு கடந்த 3-ந்தேதி திடீரென காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

வீடு திரும்பினார்

பின்னர் சட்டமன்ற தேர்தலின் போது, மருத்துவமனையில் இருந்த அவர், மாலை 6 மணிக்கு முழு உடல் கவச உடை அணிந்து ஆம்புலன்ஸ் மூலம், வந்து ஓட்டு போட்டார்.

பின்னர் மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி மருத்துவமனை சென்றார். இந்தநிலையில் அவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். இருந்தாலும், டாக்டர்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்