தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி - மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-22 03:52 GMT
சென்னை,   

மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும்போது தமிழக அரசு நிர்வாகத்திடம் எந்த வித கலந்தாலோசனையிலும் ஈடுபடாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன்  தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.

இத்தகைய  செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும்  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்  கூடாது.

அதேபோல் கொரோனா  தடுப்பூசியின் விலையை அவரவர்  இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.


மேலும் செய்திகள்