கோவை, ஈரோடு, சேலம் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ளலாம்; ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு

தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-27 19:34 GMT

ஈஷா வித்யா பள்ளிகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசுக்கு அளிப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையங்களாக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம்.

இந்த சவாலில் இருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள முடியும்.

நலத்திட்ட உதவிகள்

கடந்தாண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ஜக்கி வாசுதேவ் தனது பங்களிப்பாக ரூ.11.54 கோடியை வழங்கினார். இந்த நிதியானது, அவரது ஓவியங்களை ஆன்-லைனில் விற்பனை செய்ததின் மூலமாக திரட்டப்பட்டது.

மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் ஈடுபட்டனர். மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர் உதவிகளும் வழங்கப்பட்டன. கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் இப்போதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மேற்கண்ட தகவல் ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

மேலும் செய்திகள்