ஒன்றரை கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

Update: 2021-04-28 05:28 GMT
சென்னை,

தமிழகத்தில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஒன்றரை கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “  இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.  

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இதுவரை  (27.04.2021), 55.51 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.    

மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்