தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தாயிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தனது தாயிடம் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார்.
சென்னை,
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்தி திமுக அரியணை ஏறுகிறது. திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அவரவர் போட்டியிட்ட இடங்களில் வெற்றி வாகையை சூடினர்.
இதன்படி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அரியணையில் அமர உள்ளது. இது திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்துக்கு சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.