திருச்சி-குவைத் இடையே விமான சேவை ரத்து
கொரோனா நோய் பரவல் காரணமாக திருச்சி-குவைத் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்ததால் கடந்த சில நாட்களுக்கு முன் மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானங்களை இயக்க அந்த நாட்டு அரசு தடை விதித்தது. இதனால் அந்நாடுகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் தற்போது குவைத் நாட்டு அரசாங்கமும் இந்தியாவில் இருந்து விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளது. இதன்காரணமாக திருச்சி விமான நிலையத்திலிருந்து குவைத் நாட்டுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.