நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்.

Update: 2021-05-12 02:24 GMT
சென்னை, 

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நெல்லை மாவட்டம் பணகுடியில் வசித்து வந்தார். நேற்று மாலை நெல்லை சிவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இறுதி சடங்குகள் இன்று (புதன்கிழமை) மாலை பணகுடியில் நடக்கிறது.

நடிகர் நெல்லை சிவா 1985-ல் ஆண்பாவம் படத்தில் அறிமுகமானார். சீவலப்பேரி பாண்டி, ராவணன், மகாபிரபு, வெற்றி கொடி கட்டு, ரன், அன்பே சிவம், சாமி, வின்னர், திருமலை, திருப்பாச்சி, அன்பே ஆருயிரே, கிரீடம், தோரணை, கந்தசாமி, சகுனி, பட்டத்து யானை, எலி, மிருதன், பச்சை விளக்கு, உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நெல்லை சிவா கடைசியாக திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்து இருந்தார்.

அவர் நெல்லை தமிழில் பேசி நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. வடிவேலுவுடன் இணைந்து அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இருவரும் நடித்த கிணத்த காணோம்... காமெடி பெரிய வரவேற்பை பெற்றது. நெல்லை சிவாவுக்கு திருமணம் ஆகவில்லை. அவரது மறைவுக்கு நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா காலத்தில் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்