இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர்.

Update: 2021-06-10 22:04 GMT
கோவை,

கோவையை அடுத்த வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28), தச்சு தொழிலாளி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு அவசர தேவையாக ரூ.1½ லட்சம் தேவைப்படுகிறது என்று சரவணகுமாரிடம் கூறினார். அந்த பணத்தை கொடுத்தால் விரைவில் திரும்ப கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தார்.

ரூ.1½ லட்சம் கொடுத்தார்

இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் தோழிக்கு ரூ.1½ லட்சத்தை கொடுத்தார். பின்னர் அதை பலமுறை கேட்டும் அந்த பெண் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தர்மபுரி செல்ல சரவணகுமார் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் தர்மபுரிக்கு சென்றார். ஏற்கனவே அந்த பெண்ணின் முகவரி அவருக்கு தெரியும் என்பதால், நேராக தனது தோழியின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த தனது தோழியை சந்தித்து தான் கொடுத்த கடனை திரும்ப கொடுக்கும்படி கூறினார்.

தோழியின் மகன் கடத்தல்

அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை. பணம் கிடைக்கும் போது கொடுப்பதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், தனது தோழியின் 7 வயது மகனை அங்கிருந்து கடத்தி வந்தார்.

இதுகுறித்து அவர் தர்மபுரி போலீசில் புகார் செய்தார். இதுபற்றி தர்மபுரி போலீசார் வடவள்ளி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் இரவில் சரவணகுமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கடத்தி வைத்திருந்த 7 வயது சிறுவனையும் மீட்டனர்.

மேலும் செய்திகள்