பலியான கர்ப்பிணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலைவிபத்தில் பலியான கர்ப்பிணி பெண் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-10 22:56 GMT
சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10-ந்தேதி அதிகாலை வடபொன்பரப்பி போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஜெயலட்சுமி என்பவர் பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அழைத்து வரப்பட்டார். அவருடன் அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரும் உடன் வந்தபோது கள்ளக்குறிச்சி போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் ஏரி அரிபெருமானூர் ஏரிக்கரை அருகே 108 ஆம்புலன்சு வாகனத்தின் டயர் வெடித்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு வரும் வழியிலும், செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயும் இறந்துவிட்டனர்.

நிவாரண நிதி உதவி

இந்த துயர சம்பவத்தை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டதோடு இச்சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், அவருடன் உயிரிழந்த அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். அதோடு விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர வேண்டிய பணப் பயன்களை பெற்று வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்