2-ஆம் தவணை ரூ. 2,000 நிவாரணம்- இலவச மளிகைப் பொருட்கள் டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் நிவாரணப் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

Update: 2021-06-11 07:19 GMT
சென்னை

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்- அமைச்சராக  மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்களுக்கு ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளன.

இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன.

ஏற்கெனவே, முதல் கட்டமாக கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி பேர் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது தவணையாக கொரோனா நிவாரணத் தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்