அ.தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-11 22:03 GMT
சென்னை,

தமிழகத்தில் தொற்று குறைந்த மாவட்டங்களில் வரும் 14-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த4 நாட்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளை திறப்பது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

காட்சி மாறவில்லை

அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதை தமிழக அரசு உணரவேண்டும். ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்