நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

Update: 2021-06-15 23:41 GMT
நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை கடந்த ஏப்ரல் 20-ந் தேதி தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் வெளியிட்டார். அதில், சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள், சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் பயன்படுத்தக்கூடாது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது.
ஆகவே, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை தமிழக அரசு உடனடியாக தளர்த்தவேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தை கணக்கில் கொண்டு, 55 வயதுக்கு மேற்பட்டவர்களையும் உடனடியாக பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்