நள்ளிரவில் அத்துமீறிய கொழுந்தனை வெட்டிக் கொன்ற பெண்

நள்ளிரவில் தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்ற தனது கொழுந்தனை பெண் வெட்டிக் கொன்றார்.

Update: 2021-06-18 00:43 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாய்நாயக்கன்பேட்டையை சேர்ந்தவர் ராஜா (வயது 48), லாரி டிரைவர். இவரது அண்ணன் செல்வம் (50), இவரும் லாரி டிரைவர். இவரது மனைவி பராசக்தி (45).

ராஜா தனது மனைவியை பிரிந்து சில வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் செல்வம் டிரைவர் வேலைக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜா குடிபோதையில் தனது அண்ணி பராசக்தியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பராசக்தி வீட்டிலிருந்த அரிவாளால் ராஜாவின் கழுத்துப்பகுதியில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார்.

இதைதொடர்ந்து நேற்று அதிகாலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பராசக்தி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால் ராஜாவை கொலை செய்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பராசக்திக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்