சென்னையில் 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-20 20:22 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்து, நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றின் 3-வது அலையை சமாளிப்பதற்கான ஆயத்த பணிகளில் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு செய்து, அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

ஆக்சிஜன் வசதி

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த பிரிவுகளில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ கருவிகளும், ஆக்சிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், இ.பரந்தாமன் எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, குழந்தைகள் நல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் எழிலரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்