சென்னை மெரினா கடற்கரை சாலையில் கஞ்சா போதையில் சாலையில் படுத்து பெண் ரகளை

சென்னை மெரினா கடற்கரையில் கஞ்சா போதையில் பெண் ஒருவர் படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-04 03:07 GMT
சென்னை,

சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் தள்ளாடியபடி சாலையில் நடந்து வந்தார். திடீரென்று அவர் சாலையில் சென்றவர்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டார். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பெண் கஞ்சா போதையில் இருப்பது தெரிய வந்தது. அவர் போலீசாரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.

மெரினா கடற்கரை சாலையின் நடுவே கால் மேல் கால் போட்டு படுப்பதும், உருண்டு புரள்வதும், மாநகர பஸ்சை வழிமறிப்பதும் என கஞ்சா போதையில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்த பெண்ணின் அலப்பறை தொடர்ந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

அந்த பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் பரிதவிப்புக்கு ஆளாகினர். இந்தநிலையில் அந்த வழியாக 108 ஆம்புலன்சில் சென்ற ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்ணின் போதையை தெளிய வைப்பதற்கான திரவத்தை அளித்தனர். பின்னர் அவரை குண்டு கட்டாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் மெரினா கடற்கரை நடைபாதையில் வசிக்கும் தனலட்சுமி என்பது தெரிய வந்தது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்