சென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-23 11:24 GMT
சென்னை,

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 'நிர்பயா' என்ற பெயரிலான பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். 

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:- 

நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமூக நலத்துறை உதவியுடன் இந்த உதவி மையம் செயல்படும். 181 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தில் பெண்கள், சிறார்கள் ஆலோசனை பெறலாம். 

பெண் வன்கொடுமை, வரதட்சணை, குழந்தை திருமணம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி மையம் தொடக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும். சென்னையில் ரவுடிகள் கணக்கெடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்