சென்னையில் ஆபாச படம் பார்த்தவா்களை போலீசார் என மிரட்டி பணம் வசூல்

சென்னையில் ஆபாச படம் பார்த்தவா்களை போலீசார் என கூறி, மிரட்டி பணம் வசூலித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.

Update: 2021-07-24 23:58 GMT


சென்னை,

சென்னையில் இணையதளத்தில் ஆபாச படம் பார்ப்பவா்களை தொடர்பு கொண்ட ஒரு கும்பல் தங்களை டெல்லி போலீசார் என கூறி கொண்டு, ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டலில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்படி பணம் கொடுக்காவிட்டால் வீடுகளுக்கு வந்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அச்சுறுத்தி உள்ளனா்.  இதனால் பயந்து போன பலா் ஆன்லைன் மூலம் கேட்ட தொகையை செலுத்தியுள்ளனா்.

எனினும், பணம் செலுத்தியவர்களில் சந்தேகமடைந்த சிலா் டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.  அதில், மோசடி நடந்திருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

இதன்பின்னர் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை போலீசாரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை திருவல்லிக்கேணியில் கைது செய்துள்ளனர்.  அவர்கள் சென்னை மாங்காடு சுபம் நகா் செ. ராம்குமார் (வயது 32), ரெட்டேரி கடப்பா சாலை பூ. காபிரியேல் ஜோசப் (வயது 37), திருச்சி கன்டோன்மென்ட் பா. தினோசந்த் (வயது 29) என தெரிய வந்துள்ளது.

அந்த கும்பல் மோசடி மூலம் பலரிடம் இருந்து ரூ.34 லட்சம் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்