அவதூறாக பேசிய விவகாரம்: பாதிரியாரை தொடர்ந்து கிறிஸ்தவ இயக்க நிர்வாகி கைது

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் பாதிரியாரை தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-26 01:54 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18-ந் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார்.

இந்து கடவுள்கள், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி ஆகியோரை அவதூறாக பேசியதோடு தி.மு.க. தேர்தல் வெற்றி குறித்தும் அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பதற்றத்தை ஏற்படுத்தியது.

பாதிரியார் கைது

இதைத்தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையா கருத்துக்கு பா.ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து அவதூறாக பேசிய ஜார்ஜ் பொன்னையா, போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்த கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்பட 3 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் மதுரையில் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஒருவர் சிக்கினார்

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபனையும் போலீசார் தேடி வந்தனர். அவர் நள்ளிரவில் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எனவே நள்ளிரவில் அருமனை அருகே காரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் ஸ்டீபன் இருந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி தூத்துக்குடி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்