தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,767 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-27 15:27 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,52,049 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 29 பேர் (அரசு மருத்துவமனை - 23 பேர், தனியார் மருத்துவமனை - 6 பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,966 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 2,312 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,95,895 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 22,188 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 169 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 43 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்