தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

Update: 2021-08-24 09:53 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். 

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும்.

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திகிராம், கூடுவாங்சேரி,பொன்னேரி, இடங்கனசாலை, தாரமங்கலம், கோட்டகுப்பம், திருநின்றவூர், சோளிங்கர், தாரமங்கலம், கூடலூர், காரமடை, வடலூர், திருக்கோயிலூர், உளுந்தூர்ப்பேட்டை, சுரண்டை, களக்காடு, அதிராம்பட்டினம், மானாமதுரை,முசிறி, கருமத்தம்பட்டி, மதுக்கரை, லால்குடி, கொல்லன்கோடு ஆகியவை நகராட்சிகளாக மாற்றப்படுவதுடன், புகளூர் மற்றும் டிஎன்பிஎல் புகளூரை இணைத்து புகளூர் நகராட்சியும் உருவாக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்