மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Update: 2021-08-26 22:03 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி மற்றும் நிவாரண உதவி அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி குளக்கரை என்ற இடத்தில் கடந்த 25-ந் தேதி (நேற்று முன்தினம்) காலை 6.45 மணியளவில் கனரக வாகனம் சென்றதால் ஒரு வீட்டின் சர்வீஸ் மின் இணைப்பில் இருந்து மின்சார வயர் அறுந்து தொங்கியது.

இந்த அறுந்து தொங்கிய மின்சார வயர் பட்டு, தில்லைவிடங்கன் கிராமம், கன்னிக்கோவில் தெருவில் வசிக்கும் சின்னத்தம்பியின் மகன் சிங்காரவேலு என்பவரும், குளக்கரை தெருவில் வசிக்கும் லூர்துசாமி என்பவரின் மகன் அரவிந்த் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர் என்ற துயரச் செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிர் இழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்