உயர் சிறப்பு மருத்துவ படிப்பு மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டாய பணி செய்யாவிட்டால் ரூ.50 லட்சம் அபராதம்

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டாய பணி செய்யாவிட்டால் ரூ.50 லட்சம் அபராதம் மருத்துவ கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

Update: 2021-08-26 22:18 GMT
சென்னை,

மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில், 3 ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில், ஒவ்வொரு ஆண்டும், 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் சேர்ந்து உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர். அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்பு முடிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் கட்டாயம் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாகும்.

இந்த நிலையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பல உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் முடித்த மாணவர்கள் கட்டாய பணி செய்யவில்லை என தெரியவருகிறது. இதையடுத்து 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் கடந்த ஜூலை 30-ந்தேதி நடைபெற்றது. அப்போது 3-ம் ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் பலர், ஆஸ்பத்திரிகளில் காலியிடங்கள் இருந்தும் பணியில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை.

எனவே, பணியில் சேர விருப்பமில்லை என, எழுதி கொடுத்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்க அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘டீன்களுக்கு’ மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்