சூடான பிரியாணி கேட்டவருக்கு சரமாரி கத்திவெட்டு

வில்லியனூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூடான பிரியாணி கேட்டவருக்கு சரமாரியாக கத்திவெட்டு விழுந்தது.

Update: 2021-09-08 16:40 GMT
வில்லியனூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூடான பிரியாணி கேட்டவருக்கு சரமாரியாக கத்திவெட்டு விழுந்தது.
வரவேற்பு நிகழ்ச்சி
சென்னையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் கடந்த 5-ந் தேதி வில்லியனூர் கோட்டைமேடு பகுதியில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
பின்னர் அவர், சாப்பிடுவதற்காக சென்று அமர்ந்தபோது, ஆட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது. அப்போது பிரியாணி சூடு ஆறிபோய் இருந்ததாக கூறப்படுகிறது. சூடாக பிரியாணி இருந்தால் கொண்டு வாருங்கள் என்று சிவக்குமார் கேட்டுள்ளார்.
கத்திவெட்டு
அப்போது அங்கிருந்த மாப்பிள்ளையின் தந்தை சேகர் என்பவர் இந்த பிரியாணி தான் எல்லோருக்கும், உனக்கு மட்டும் ஸ்பெஷலாக போட முடியாது என்று கூறி சிவக்குமார் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் அங்கிருந்த 2 பேர் அவரை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டியதாக தெரிகிறது. 
இதில் படுகாயம் அடைந்த சிவக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்