கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தவில்லை என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தவில்லை என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-09-08 19:24 GMT
சென்னை,

பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனிதத்தன்மையற்ற செயல். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கழிவுநீர் அடைப்புகளைச் சரிசெய்ய எந்திரங்களை பயன்படுத்துவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்