கோவை குற்றால அருவிக்கு இன்று முதல் 4 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
நீர்வரத்து அதிகரித்ததால் கோவை குற்றாலத்துக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
கோவை,
கொரோனா காரணமாக கோவை அருகே உள்ள கோவை குற்றாலம் சுற்றுலா மையம் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 6-ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. இதனால் கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கொரோ னா தடுப்பு விதிகளை கடைபிடித்து அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் அளவுக்கு அதிகமாக நீர் வருகிறது. எனவே கோவை குற்றாலம் சுற்றுலா மையம் 4 நாட்கள் மூடப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கேரளா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் கோவை குற்றாலத்துக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இயலாத நிலை உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 12-ந் தேதி வரை 4 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.