ஆள்மாறாட்டத்தில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்

கிருமாம்பாக்கம் அருகே ஆள்மாறாட்டத்தில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-09-13 14:59 GMT
பாகூர், 
கிருமாம்பாக்கம் அருகே ஆள்மாறாட்டத்தில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

வழிமறித்து தாக்குதல்

பாகூர் கொம்யூன் சார்காசிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 24). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், அருண், தனது உறவினர்கள் சிலம்பரசன், ஆனஸ்ட்ராஜ் ஆகியோருடன்  பிள்ளையார்குப்பத்தில் இருந்து பின்னாச்சிகுப்பம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் பின்தொடர்ந்து வந்து அருண், சிலம்பரசன், ஆனஸ்ட்ராஜ் ஆகியோரை வழிமறித்து தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். இதில் சிலம்பரசன், ஆனஸ்ட்ராஜ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அருண் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவர் மீது உருட்டுக்கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

ஆள் மாறாட்டம்

இதுபற்றி தகவல் அறிந்த சார்காசிமேடு கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, அந்த கும்பலை விரட்டியடித்தனர். பின்னர் படுகாயமடைந்து கிடந்த அருணை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலியமேட்டை சேர்ந்த பிரவீன், அருள், செல்வமணி, இளஞ்செழியன் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் அருணை தாக்கியது தெரியவந்தது. கடந்த 8-ந் தேதி நடந்த ஒரு தகராறில் ஈடுபட்ட சேலியமேடு பேடில் இருந்த அருண்குமார் என்பவரை பிரவீன் தரப்பினர் தாக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் பெயர் ஒற்றுமையால், ஆள்மாறாட்டத்தில் அருண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
வலைவீச்சு
தப்பியோடிய பிரவீன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆள்மாறாட்டத்தில் வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் சார்காசிமேடு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்