பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு

புதிய பணி விதிகளின்படி நியமிக்கப்படும் அர்ச்சகர்களின் பணி நியமனம், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், தற்போது அர்ச்சகர் நியமனத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-10-21 00:13 GMT
சென்னை,

கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை கடந்த 2020-ம் ஆண்டு புதிய பணி விதிகளை கொண்டு வந்தது. அதில், ‘18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அவர்கள் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து ஏற்கனவே பல அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்து, அந்த வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

சட்டவிரோதம்

இந்த நிலையில், ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும். ஆனால், அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்ட விரோதமானது.

28-க்கும் மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளது. அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

முடியாது

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘தற்போதைய நிலையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆனால் அர்ச்சகர் பணிநியமனங்கள் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்