எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் உள்பட 2 பேர் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-26 19:24 GMT
அரசு வேலை

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். என்ஜினீயரான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 45). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வருகிறார்.

நண்பர் ஒருவர் மூலம் அவர் எனக்கு அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை அணுகி அரசு வேலை வாங்கி தரும்படி கூறினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி ்தருவதாக கூறினார். இதை நம்பி அவரிடம் ரூ.17 லட்சம் கொடுத்தேன். பணம் பெற்று வருடக்கணக்கில் ஆகியும் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

தனிப்படை போலீசார்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரிடம் அரசு வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்து வருகிறார். மேலும் அவர் மிரட்டல் விடுக்கிறார். எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய மணி மற்றும் புரோக்கராக செயல்பட்ட அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

வழக்கு

விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, புரோக்கராக செயல்பட்ட செல்வகுமார்(50) ஆகியோர் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மணி, செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, நெய்வேலியை சேர்ந்த தமிழ்செல்வன் அரசு வேலை பெறுவதற்காக மணியின் வங்கி கணக்கிற்கு ரூ.17 லட்சம் அனுப்பி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதற்கு புரோக்கராக சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் செயல்பட்டு இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. ரூ.17 லட்சத்தில், ரூ.4 லட்சம் திரும்ப கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

கோடிக்கணக்கில் மோசடி

இந்த நிலையில் மணி, செல்வகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 25 பேரிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் பெற்று, மோசடி செய்த மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிலர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் புகார் கொடுத்து உள்ளனர். இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்