கார் மீது வேன் மோதி தாத்தா - பேரன் பலி உறவினர் திருமணத்திற்கு சென்றபோது பரிதாபம்

உறவினர் திருமணத்திற்கு சென்றபோது கார் மீது வேன் மோதியதில் தாத்தா - பேரன் பலியானார்கள்.

Update: 2021-11-08 20:14 GMT
திருவண்ணாமலை,

காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 33). என்ஜினீயர். அவரது மனைவி சுகன்யா (30). இவர்களுடைய மகன் விஷ்வா (8), மகள்கள் நிலா (5), கமலி (3). இவர்களுடைய உறவினர் திருமணம் திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூரில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக இளங்கோவன் தனது மனைவி, மகன், மகள்கள் மற்றும் இளங்கோவனின் சித்தப்பா குழந்தைவேலு (60), இவரது மனைவி புஷ்பா ஆகிய 7 பேரும் வையாவூர் கிராமத்திலிருந்து நேற்று காலை காரில் புறப்பட்டனர். இளங்கோவன் காரை ஓட்டிவந்தார். மாமண்டூர் ஐந்து கண் பாலத்தின் அருகே வந்தபோது எதிரே சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஊழியர்களை ஏற்றி வந்த வேன் திடீரென கார் மீது மோதியது.

தாத்தா- பேரன் பலி

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த குழந்தைவேலு, சிறுவன் விஷ்வா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்