மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறையத் தொடங்கியது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

Update: 2021-11-22 00:23 GMT
மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 13-ந் தேதி இரவு அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அன்றுமுதல் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே உபரிநீராக திறந்து விடப்பட்டு வந்தது.

அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. 

இதன்படி நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதே சமயம் அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதில் 17 ஆயிரம் கனஅடி நீர், அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 38 ஆயிரம் கனஅடி நீர் 16 கண் மதகுகள் வழியாகவும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது.

மேலும் செய்திகள்