மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் என்று தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து, தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-11-23 23:14 GMT
சென்னை,

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரிப் பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், கோர்ட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சிறைக்கைதிகளுக்கு ஊதியம் கொடுத்தது போலவும் போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்து உள்ளது. உண்மையில் ஆயிரக்கணக்கில் பொருட்களை தயாரித்துவிட்டு லட்சக்கணக்கில் அவற்றை விற்றுள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர்.

போலீஸ் விசாரணை

இதில் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி., தமிழக உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “சிறையில் ஆயிரக்கணக்கான கவர்கள் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால் அந்த கவர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கை பொது நல வழக்காக தொடர முடியாது” என்று கருத்து தெரிவித்தனர்.

முழு விவரம்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், “தணிக்கை அறிக்கையின் மூலமாகவே இந்த ஊழல் வெளியே வந்துள்ளது. அதை உறுதிபடுத்தவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது” என்றார்.

அதற்கு நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரர் முழுமையான விவரங்களுடன் புதிதாக மனுவை தாக்கல் செய்யலாம் என்றனர்

இதையடுத்து இந்த வழக்கை திரும்ப பெறுவதாக வக்கீல் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்