கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்... சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி...!
கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடலால் சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி,
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். இவற்றில் கன்னியாகுமரியில் தொடர்மழையால் தெருவெங்கும் வெள்ளநீர் நிரம்பி காணப்படுகிறது.
இதேபோன்று குமரியில் கடந்த சில ஆண்டுகளாக, கடல் நீர் உள்வாங்குவது, நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், திடீர் கொந்தளிப்பு, அலைகளே இல்லாமல் குளம் போல இருப்பது, கடலின் நிறம் மாறுவது போன்ற பல விசயங்கள் நடந்து வருகின்றன.
கன்னியாகுமரியில் 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கன்னியாகுமரி பகுதியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து உள்வாங்கவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் லேசான அச்சத்திற்கு உள்ளாகினர். நேற்றும், இன்றும் என 2 நாட்கள் நீர்மட்டம் உள்வாங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.
இதனைக்கண்ட சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சிலர் கடலுக்குள் சென்று பாறைகளுடன் செல்பி எடுப்பது என இருந்தனர். இதனை கவனித்த கடலோர போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், குமரியில் கடல்நீர் உள்வாங்கியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.