ஆவடி ரெயில் நிலையத்தில்: கல்லூரி மாணவர்கள் ‘திடீர்’ ரெயில் மறியல்

ஆவடி ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீரென ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-28 22:14 GMT
ஆவடி,

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி நேற்று மாலை புறநகர் மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் ஏறிய கல்லூரி மாணவர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அப்போது அவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பாட்டுப்பாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவதியடைந்த ரெயில் பயணிகள் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் நேற்று மாலை 4:15 மணிக்கு ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும், அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை ரகளையில் ஈடுபட்ட 4 கல்லூரி மாணவர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி ஆவடி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ரெயிலை மறித்தனர்

இதைகண்ட சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆவடி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து ஆவடி ரெயில்வே போலீசார் 4 மாணவர்களிடமும் ரெயிலில் பொதுமக்களுக்கு இடையூறாக இடையூறு செய்யக்கூடாது என அறிவுரைக்கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயில் புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், ரெயில் இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் வந்திறங்கியதும் மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி ரெயிலின் முன்பு நின்று கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை அரக்கோணம் மார்க்கமாக ரெயில்கள் சுமார் ½ நேரம் தாமதமாக சென்றது.

வாக்குவாதம்

இதனால் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் மற்றும் பட்டாபிராம் போலீசார் மாணவர்களை கலைந்து போக செய்துள்ளனர். இதையடுத்து ரெயிலில் பயணம் செய்த பொதுமக்கள் மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் கல்லூரி மாணவர்கள் செல்லும் காலை, மாலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இதுபோன்று செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்