புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு- விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

தமிழக எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2022-01-09 11:38 GMT
புதுச்சேரி, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக மாநில எல்லைகள் மூடப்பட்டன. புதுச்சேரி மாநில எல்லைகளான கோரிமேடு, கனகசெட்டிகுளம், கன்னியகோவில், மதகடிப்பட்டு பகுதிகளில் தமிழக போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு நுழைய முயன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி வருகின்றன. அப்போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்காக சென்ற வாகனங்களை மட்டும் அனுமதிக்கப்பட்டது.  இதே போல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாகனங்கள் எந்த வித தடையும் இல்லாமல் வந்தன.

தமிழக எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம், வானூர் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்