தர்மபுரி: வேன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 3 வாலிபர்கள் பலியானார்கள்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் திருஞானம் (26), புபேஷ்குப்தா (28), பெருமாள்சாமி (28) . இவர்கள் மூவரும் ஒரே மோட்டர் சைக்கிளில் கடந்த 14-ம் தேதி சனிசந்தைக்கு சென்றுவிட்டு பாளையம்புதூர் திரும்பி கொண்டிருந்தனர்.
பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு வந்த போது சென்னையில் இருந்து சேலம் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் திருஞானம்(26), புபேஷ்குப்தா(28), பெருமாள்சாமி(28) ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதில் பெருமாள்சாமி (28) என்பவர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். படுகாயமடைந்த திருஞானம் மற்றும் புபேஷ்குப்தா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பலன் அளிக்காமல் திருஞானம், புபேஷ்குப்தா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையில் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் தொப்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணிநேர பேச்சு வார்த்தைக்கு பிறகு உங்களது கோரிக்கையை உடனடியாக உயர் உதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.