தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து ரூ3.44 கோடி அபராதம் வசூல் - காவல்துறை

தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து ரூ3.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-16 07:28 GMT
கோப்பு படம்
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த வாரம் 9-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் 2-வது வாரமாக இன்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து ரூ3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  1.64 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கின்போது வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்