கர்ப்பமானதால் அவமானம் தாங்க முடியாமல் - விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை

கர்ப்பமானதால் அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை பள்ளி தலைமை ஆசிரியர் கைது.

Update: 2022-01-18 19:51 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயதுடைய மாணவி சென்னை கோவளத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்றுவலியால் அவதிப்பட்ட மாணவியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 7-ந் தேதி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனாலேயே மாணவி விஷம் குடித்ததும் தெரிந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான கார் டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரிபிரசாத் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.

அதே நேரத்தில் மாணவி கர்ப்பமாக இருந்தது ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியரான திண்டிவனத்தை சேர்ந்த குமரகுருபரன் (51) மற்றும் திண்டிவனத்தை சேர்ந்த வார்டன் செண்பகவள்ளி (35) ஆகியோருக்கு தெரிந்து இருந்துள்ளது. ஆனால் அவர்கள் குழந்தைகள் நல ஆணையத்திற்கும், போலீசாருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் மறைத்து உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் குமரகுருபரன் மற்றும் செண்பகவள்ளியை விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்