மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்
தனது மகள்களுடன் ஆட்டோ டிரைவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஞானவேல் (வயது 44) இவர் மனைவி ஜெயந்தி (வயது-38). இவர்களுக்கு ஐஸ்வர்யா, பூஜா என்ற இருமகள்கள் இருந்தனர். இந்நிலையில் ஞானவேல் கடந்த 15 ம் தேதி மகள்களுடன் ஆட்டோவில் வெளியில் சென்றுள்ளார்.
அவர்கள் வீடு திரும்பவில்லை எனக் கூறப்பட்டுகிறது. இதனையடுத்து ஜெயந்தி எழும்பூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் உள்ள கிணற்றில் அருகே ஆட்டோ ஒன்று அநாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது அருகில் இருந்த விவசாய கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர் மிதப்பதை கண்டுள்ளனர்.
போலீசார் மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எழும்பூரில் காணாமல் போன ஞானவேல் என்பதும் தந்தை ஞானவேலுடன் மகள்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி பிரேதமாக நீரில் மிதந்துள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.